கார் மீது பஸ் மோதி விபத்து : பாமக மாநில நிர்வாகி உடல் நசுங்கி பலி
திருச்சி :கார் மீது ஆம்னி பஸ் மோதியதில் பாமக மாநில இளைஞரணி செயலாளர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். திருச்சி தென்னூர், அண்ணா நகர், கண்ணதாசன் சாலையை சேர்ந்தவர் அறிவுசெல்வன் (39). பாமக மாநில இளைஞரணி செயலாளர். நேற்று கட்சி பணிக்காக சென்னை சென்றுவிட்டு திருச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் சத்தியசீலன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அறிவுசெல்வன் பின¢ சீட்டில் படுத்திருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி அடுத்துள்ள கொள்ளிடம் செக்போஸ்ட் அடுத்து கொண்டையம்பேட்டை மெயின்ரோடு ‘ஒய்‘ பிரிவு சாலை திருப்பத்தில் கார் திரும்பியது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் அறிவுசெல்வனுக்கு தலையில் அடிபட்டது. ரத்தம் கசிந்த நிலையில் டிரைவரிடம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யுமாறு தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றபோது பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கார் டிரைவர் சத்தியசீலன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து ஆம்னி பஸ் டிரைவர் ராமசாமி (30) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் இறந்த அறிவு செல்வனுக்கு சொந்த ஊர் அரியலூர் ஆகும். திருச்சியில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார். பிரேதபரிசோதனைக்குப் பின் அவரது உடல் அரியலூர் கொண்டு செல்லப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விரைந்துள்ளார்.