மனவளர்ச்சி குறைந்த 3 வயது பெண் குழந்தையை ரோட்டில் வீசிய தாய்
உசிலம்பட்டி: மனவளர்ச்சி குறைந்த 3 வயது பெண் குழந்தையை ரோட்டில் வீசி சென்றுள்ளார் தாய். குழந்தையை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேனி செல்லும் சாலையில் ஆர்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இதன் நுழைவு வாயிலில் 3 வயது பெண் குழந்தையை இன்று அதிகாலையில் யாரோ வீசி சென்று விட்டனர். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்தனர். குழந்தைக்கு அருகிலேயே அதன் உடைகள், பால் பாட்டில் போன்றவை கிடந்தன. அதனால் குழந்தையை அதன் தாய்தான் விட்டு சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து உசிலம்பட்டி ஆர்டிஓ சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி உசிலம்பட்டி தாசில்தார் ராஜேந்திரன், கிராம நிர்வாக உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோர் வந்து, அப்பகுதியை சேர்ந்தவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் நலச் சங்கத்தை சேர்ந்த வேல்முருகன், அரிமா சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோர் குழந்தைக்கு தேவையான உதவிகளை செய்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி டிஎஸ்பி குமார் உத்தரவின்படி, குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.