சென்னை: தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பதிலுரைக்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன், சபாநாயகரை பார்த்து கை நீட்டி பேசினார். இதையடுத்து, வெங்கடேசனை கூட்டத் தொடர் முடியும் வரை சபை நடவடிக்கைகளில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். இந்நிலையில், சட்டசபை இன்று காலை கூடியது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் பேசும் போது, ‘‘தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று காலை சபாநாயகரை, அவரது அறையில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதனால், 10.5.2025 அன்று அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீக்க வேண்டும்.
இதுபோல், அவர் நடந்து கொள்ள கூடாது என எச்சரிக்கையுடன் இன்று முதல் அவர் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார். இந்த தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் சபாநாயகர் ஜெயகுமார் பேசுகையில், ‘‘தேமுதிக உறுப்பினருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு, இன்று முதல் அவர் மீண்டும் அவைக்கு வரலாம் என்று உத்தரவிடுகிறேன். இனிமேல் அவைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook