கோமா நிலைக்கு சென்று இறந்த இளம்பெண் ருக்மணி உடல் வேலூரில் போஸ்ட்மார்ட்டம்: வீடியோவில் பதிவு
நாகர்கோவில்: கோமாவில் இறந்த ருக்மணியின் உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்த கணேசன் மனைவி ருக்மணி (34). இவர் கடந்த வருடம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதில், நைட்ரஸ் ஆக்ஸைடு சிலிண்டர் பொருத்தியதால் கோமா நிலைக்கு சென்றார். 1 வருடமாக கோமா நிலையில் இருந்த அவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி இறந்தார். அவரது உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் ருக்மணியின் கணவர் கணேசன், அரசு மருத்துவர்கள் தனது மனைவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது. தனியார் மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேலூர் அரசு மருத்துவமனையில் ருக்மணியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். 2 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும். பிரேதபரிசோதனை முழுவதையும் 2 வீடியோ கிராபர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இன்று காலை ருக்மணியின் உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து, வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை நடந்தது. 2 பேர் வீடியோ பதிவு செய்தனர்.