ஜகார்தா: இந்தோனேசியாவில் காணாமல் போன ரஷ்ய விமானம் நொறுங்கி கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளனர். அதில் பயணம் செய்த பயணிகள் 50 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் ஜெட் விமானம் சுகோய் சூப்பர்ஜெட் 100. இந்த ரக விமானங்கள் மலைப் பகுதிகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்ல பயன்படுத்தப்படுகின்றன. நேற்று ரஷ்ய ஜெட் விமானத்தில் 6 ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் கொண்ட 50 பேர் குழு இந்தோனேசியாவில் சுற்றுலா சென்றது. இங்கு மலைப் பகுதிகளை ஏற்கனவே 2 முறை சுற்றி பார்த்த குழுவினர், மவுன்ட் சலாக் என்ற பகுதியை சுற்றிப் பார்க்க கிளம்பினர். மலைகளின் இயற்கை அழகை கண்டுகளித்த பின், தலைநகர் ஜகார்தா விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஜாவா தீவின் மேற்கு பகுதியில் திடீரென விமானம் காணாமல் போனது. அடுத்த சில வினாடிகளில் விமானத்தின் ரேடார் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக விமானத்தை ஹெலிகாப்டரில் தேடும்படி மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டனர்.
விமானத்தில் கேமராமேன் மற்றும் நிருபரை டிரான்ஸ் டிவி நிறுவனம் அனுப்பி இருந்தது. இதன்தலைமை நிருபர் கடோட் டிரியான்டா கூறுகையில், ‘‘மவுன்ட் சலாக் மலை பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மழையும் பெய்தது. விபத்தில் சிக்கி விமானம் நொறுங்கி இருக்கலாம் என்று அஞ்சுகிறோம்‘‘ என தெரிவித்தார். இந்நிலையில், மவுன்ட் சலாக் பகுதியில் ரஷ்ய விமானம் நொறுங்கி கிடக்கும் இடத்தை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போகார் நகர் அடாங் சஞ்சயா விமான தளத்தின் மேஜர் அலி உம்ரி லூபிஸ் கூறுகையில், ஜாவா மேற்கில் மவுன்ட் சலாக் மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் 1,500 மீட்டர் உயரத்தில் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கிடக்கின்றன. பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானம் நொறுங்கிய இடத்தில் சடலங்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று இன்று காலை தெரிவித்தார். வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook