கொலராடோ பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் உயிர் தப்பிய கரடி காரில் அடிபட்டு பரிதாப சாவு
போல்டெர் :அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள மரத்தின் மீது கடந்த வாரம் சிக்கி தவித்த கரடி, காரில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. ஒரு மரத்தில் கடந்த 26ம் தேதி கரடி ஒன்று உயரத்தில் ஏறி சிக்கி கொண்டது. கீழே இறங்க முடியாமல் தவித்த கரடியை, மீட்புப் படையினர் காப்பாற்றினர். மரத்தில் இருந்து கீழே விழும் போது மெத்தையை வைத்து அடிபடாமல் பத்திரமாக கரடி மீட்கப்பட்டது. இந்த காட்சிகள் பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை அந்த கரடி பல்கலைக்கழகத்துக்கு வந்த காரில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது என்று கொலராடோ பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் கூறுகையில், இரண்டு கார்கள் கரடி மீது மோதி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு டிரைவருக்கு காயம் ஏற்பட்டது என்றார். கடந்த வாரம் மரத்தில் சிக்கி உயிர் தப்பிய கரடி, காரில் அடிபட்டு இறந்தது பல்கலைக்கழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.