மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ மணி மரணம்
மார்த்தாண்டம்: விளவங்கோடு தொகுதி முன்னாள் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மணி இன்று காலை உடல்நலக்குறை வால் மரணமடைந்தார். குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 4 முறை மார்க்சிஸ்ட் எம்எல்ஏவாக இருந்தவர் டி. மணி, (88). உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் மரணமடைந்தார். மார்த்தாண்டம் அருகே உள்ள கல்பகவிளை பகுதியை சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
முதுமை காரணமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்த அவரை நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை அவர் இறந்தார். கடந்த 1980ல் அவரது அண்ணன் ஜிஎஸ் மணி எம்எல்ஏவாக இருந்த போதே இறந்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக டி.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் தமிழக சட்டசபை கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த மறு தேர்தலில் மீண்டும் டி. மணி வெற்றி பெற்றார். அதன்பிறகு 96, 2001ல் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
இதற்கிடையே 1986 மற்றும் 91ல் குழித்துறை நகர் மன்றத் தலைவராகவும் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மே தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.