பாலக்கோடு: மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை தாயே கள்ளிப்பால் கொடுத்து கொன்றார். குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கணவன்,மனைவியை போலீசார் கைது செய்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள கொப்பகரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (29). இவரது மனைவி செல்வி (22). 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக பிறந்த ஒரு பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான செல்விக்கு கடந்த மார்ச் 28ம் தேதி மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 3ம் தேதி, செல்வி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றார். வீட்டின் அருகேயே குழந்தையின் உடலைப் புதைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். பாலக்கோடு தாசில்தார் மாதவன், செல்வியின் வீட்டுக்கு சென்று விசாரித்தார். ‘பெண் குழந்தை பிறந்ததால், எனது கணவர் குழந்தையை கொன்றுவிடுமாறு என்னிடம் தகராறு செய்தார். இதனால் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையைக் கொன்றேன்’ என்று செல்வி வாக்குமூலம் கொடுத்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி மற்றும் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது குழந்தையும் பிறந்த சில நாட்களில் இறந்ததால், அந்த குழந்தையையும் கொன்றிருப்பார்களோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, தாசில்தார் மாதவன் முன்னிலையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதையடுத்து செல்வி மற்றும் செல்வம் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook