புவனேஸ்வர் :ஒடிஷா எம்எல்ஏவை விடுவிக்க நக்சல்கள் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர். சிறையில் இருக்கும் 150 நக்சல்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஒடிஷாவில் கடந்த 23ம் தேதி ஆளும் கட்சி எம்எல்ஏ ஜினா ஹிகாகா, நக்சல்களால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க, சிறையில் இருக்கும் நக்சல்கள், ஆதரவாளர்கள் 29 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நக்சல்கள் குறிப்பிட்டவர்களில், 25 பேரை ஜாமீனில் விடுவிப்பதாகவும், 13 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் ஒடிஷா அரசு தெரிவித்தது. ஆனால் இதை நக்சல்கள் நிராகரித்தனர். எம்எல்ஏவின் தலைவிதியை நக்சல் கோர்ட் முடிவு செய்யும் என்றும், இறுதித் தீர்ப்பை வரும் 25ம் தேதி அறிவிப்போம் என்றும் கூறினர்.
இந்நிலையில், எம்எல்ஏவை விடுவிக்க புதிய நிபந்தனையை நக்சல்கள் விதித்துள்ளனர். எம்எல்ஏவை கடத்தி வைத்துள்ள ஆந்திர , ஒடிஷா எல்லை சிறப்பு மண்டல கமிட்டி நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் தயா, நேற்று மீடியாக்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ‘அரசின் கொள்கைக்கும் அணுகுமுறைக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நக்சல்களை விடுவிப்பதில் அரசு தாமதம் காட்டுவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். எம்எல்ஏவை மீட்பதில் அரசுக்கு விருப்பம் இருந்தால், மால்கன்கிரி, கோராபுத்தில் சிறைகளில் உள்ள 150 நக்சல்களையும் விடுதலை செய்ய வேண்டும். நக்சல்கள் வேட்டையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்Õ என்று கூறியுள்ளார். ஆனால் இந்த கடிதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என ஒடிஷா மாநில உள்துறை செயலாளர் பெகேரா தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook