கணவருடன் தகராறு தீக்குளித்த பெண் பலி; குழந்தையும் சாவு திருவள்ளூர் அருகே சோகம் கருத்துகளை தெரிவிக்க
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த இறையாமங்கலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (24). திருமணமாகி 4 வருடம் ஆகிறது. மகன்கள் ஹேமந்த்குமார் (3), கணேஷ் (2) உள்ளனர். அரிகிருஷ்ணன் குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும்.
நேற்று மதியம் அரிகிருஷ்ணன் வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியிடம் கோபித்துக்கொண்டு அரிகிருஷ்ணன் வெளியே போய்விட்டார். மனமுடைந்த சங்கீதா, வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை குழந்தைகள் மீது ஊற்றினார். பின் தன் மீதும் ஊற்றினார். நடப்பதை அறியாமல் குழந்தைகள் இருவரும் அழுதபடி இருந்தனர். உடனே தன் மீது தீ வைத்துக்கொண்டு குழந்தைகள் இருவரையும் கட்டி பிடித்தார் சங்கீதா. இதில் மூவரும் தீக்காயங்களுடன் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உயிருக்குப் போராடிய சங்கீதா, அவரது இரண்டு குழந்தைகளையும் மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமந்த்குமார் இறந்தார். சிறிது நேரத்தில் சங்கீதாவும் இறந்தார். உடல் கருகிய நிலையில் கணேஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் டிஎஸ்பி பாரதி, அரிகிருஷ்ணனிடம் விசாரிக்கிறார். ஆர்டிஓ அண்ணாமலை மேல்விசாரணை நடத்துகிறார். குடும்பத் தகராறில் பெண்ணும் அவரது குழந்தையும் தீயில் கருகி இறந்தது இறையாமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook