சென்னை : சென்னையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சைதை துரைசாமி, நாளை மறுநாள் நடக்கும் விழாவில் பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் நாளை மறுநாள் பதவி ஏற்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சி வார்டுகளிலும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் 89 இடங்களையும் 529 பேரூராட்சிகளில் 285 இடங்களையும் அதிமுக பிடித்தது. திமுக 23 நகராட்சிகளிலும் 121 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றது. தேமுதிக, பா.ஜ.வுக்கு தலா 2 இடங்கள் கிடைத்தன. குளித்தலை நகராட்சியில் தேமுதிக வெற்றி பெற்றது. இதுதவிர பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் நாளை மறுநாள் பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இவர்களை கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பான்மையான வார்டுகளில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளதால், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பதவிகளும் அந்த கட்சிக்கே கிடைக்கும்.
சென்னையின் புதிய மேயர் பதவி ஏற்பு விழா, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரிப்பன் மாளிகை வளாகத்தின் முன்புறம் விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால், சிறிய மேடையே அமைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் அமர்வதற்கான இருக்கைகள் போடப்படுகின்றன. புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சைதை துரைசாமி, மேயருக்கான அங்கி மற்றும் தங்க செயின், செங்கோலுடன் விழா மேடைக்கு அழைத்து வரப்படுவார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து 200 வார்டுகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மேயர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்வார்கள். பதவி ஏற்பு விழா முடிந்ததும் மேயர், தனக்கான அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.
வரும் 29-ம் தேதி துணை மேயர் தேர்தல் நடக்கிறது. அதிமுக பெண் கவுன்சிலர்களில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை மேயர் தேர்தல் முடிந்ததும் மண்டல குழு தலைவர்கள், பணிகள் நிலைக் குழு, நகரமைப்பு நிலைக் குழு, சுகாதார நிலைக் குழு, நிதி-வரி விதிப்பு நிலைக் குழு, கல்வி நிலைக் குழு ஆகியவற்றுக்கான தேர்தல் நடக்கும்.
மேயருக்கு 18 பவுன் செயின்
மேயர்களுக்கு பிரத்யேக அங்கி உள்ளது. இந்த அங்கியை அணிந்துதான் பதவியேற்பார்கள். மேலும் பதவியேற்பு விழாவின்போது, மேயருக்கு பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்க செயின் அணிவிக்கப்படும். செங்கோலும் வழங்கப்படும். அவற்றுடன்தான் மேயர் பொறுப்பு ஏற்க வேண்டும். மேயர் அணியும் தங்க செயின், கலைநுட்பத்துடன் 18 பவுனில் உருவாக்கப்பட்டது. இது இந்தியன் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மட்டும் வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்டு மேயருக்கு அணிவிக்கப்படும். மீண்டும் பாதுகாப்பாக வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
மாநகராட்சியில் இதுவரை 155 வார்டுகள் இருந்ததால் மன்ற அரங்கிலும் 155 உறுப்பினர்கள் அமருவதற்கான இடங்களே இருந்தன. இப்போது 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதால் அதற்கேற்ப அரங்கில் 200 இருக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதவிர துணை மேயர், கமிஷனர், துணை கமிஷனர்கள், 10 மண்டல அதிகாரிகள், துறை தலைவர்கள் அமர்வதற்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வையாளர் மற்றும் பத்திரிகையாளர்கள் அமர்வதற்கு தனி மாடமும் உள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டங்களில் எம்எல்ஏக்களும் பங்கேற்கலாம். சென்னை எல்லைக்கு உட்பட்ட 24 சட்டசபை தொகுதி எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்க உரிமை உள்ளது. அவர்களுக்காக அரங்கில் தனி இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook