புற்றுநோயால் மரணமடைந்த அமைச்சர் கருப்பசாமி உடலுக்கு சொந்த ஊரில் கண்ணீர் அஞ்சலி : இன்று மாலை உடல் அடக்கம்
சங்கரன்கோவில் : புற்றுநோயால் மரணமடைந்த அமைச்சர் கருப்பசாமியின் உடல் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான புளியம்பட்டிக்கு வந்தது. மாலை 3 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் கருப்பசாமி (56). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான புளியம்பட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சங்கரன்கோவில் நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மறைந்த அமைச்சர் கருப்பசாமி 4 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், சீதாலட்சுமி என்ற மகளும், மாரிச்சாமி என்ற மகனும் உள்ளனர்.