சில்க் வேடத்தில் நடிக்கும் வித்யா உடல்நிலை பாதிப்பு!
மும்பை: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை வித்யா பாலன் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1980களில் தமிழ் திரையுலகில் கவர்ச்சி சூறாவளியாக கலக்கியவர் சில்க் ஸ்மிதா. இவர் திடீரென்று தற்கொலை செய்தது சினிமா உலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற படம் உருவாகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
‘சில்க்கின் கண்கள், உடல்வாகு மிக மிக கவர்ச்சியானவை. அதற்கும் வித்யா பாலனுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று பலரும் கூறி வந்தனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சில்க் படங்களை போட்டு பார்த்து அவரது மேனரிசங்களை தெரிந்துகொண்டு வித்யா பாலன் நடித்தார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சில்க் போல உடல்வாகை மாற்ற உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் வித்யா பாலன் தீவிரமாக ஈடுபட்டார். ஐந்தாறு நாட்களே ஷூட்டிங் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அடிக்கடி சோர்வடைந்ததுடன், மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வித்யா சேர்க்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ‘ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சோர்வு, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க கூடாது. ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ‘வித்யாவின் உடல்நலன்தான் முக்கியம். அவர் குணம் அடைந்த பிறகு ஷூட்டிங் தொடங்கும்’’ என்று படத்தின் டைரக்டர் மிலன் லுத்ரியா கூறியுள்ளார்.