குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு மன அழுத்தம்!
வாஷிங்டன்: குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில் (ப்ரி மெச்சூர்) பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகம் உள்ளது என்று பச்சிளம் குழந்தைகள் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழக பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்: பிரசவ காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளது. இத்தகைய குழந்தைகள் பிறந்தவுடன் தனி கவனம் செலுத்தப்பட்டு இன்குபேட்டர் உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் பேணப்படுகிறது.
இது, ‘நியோ நேட்டல் இன்டன்சிவ் கேர்Õ (என்ஐசியு) எனப்படுகிறது. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகமாகிறது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடலின் வெப்பநிலை குறைதல் அல்லது மாறுபடுதல், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி மாற்றம், தொற்று நோய் பாதிப்பு, உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளும் இருக்கின்றன.
போதிய ஆக்ஸிஜன் மூளைக்கு கிடைக்காவிட்டால் அதன் திசுக்கள் மற்றும் புதிய செல் வளர்ச்சி பாதிக்கப்படும். இது மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதிக்கும். இதுவே மன அழுத்த பாதிப்புக்கு காரணமாகிறது. கர்ப்ப காலத்தில் உரிய மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சையால் கர்ப்பிணிகள் குறை பிரசவத்தை தவிர்க்க முடியும். குழந்தைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கைகளில் கர்ப்பிணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.