பெங்களூர்: குவாரி மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லட்சுமி அருணா, கூட்லகி தொகுதி எம்.எல்.ஏ. நாகேந்திரா வீடு உட்பட 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். குவாரி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை ஆந்திர சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 6ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் முதல் கட்டமாக நடத்திய விசாரணை மற்றும் வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் உள்பட 6 நாடுகளில் தேவி அருணா பிரம்ணி ஸ்டீல் கம்பெனி என்ற பெயரில் தொழிற்சாலை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
பெல்லாரி மாவட்டத்தில் இருந்து இரும்பு தாதுகளை வெட்டி சீனாவில் இயங்கி வரும் Ôபோம்Õ என்ற நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். அதில் கிடைத்த லாபத்தில் வெளிநாடுகளில் தொழிற்சாலை தொடங்கியும், சில நாடுகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகளில் முதலீடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரில் சென்று விவரம் பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லட்சுமி அருணாவுக்கு சொந்தமான எம்.ஏ.சி. மைனிங் கம்பெனி அலுவலகத்தில் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ரெட்டிக்கு நெருக்கமான அவரது நண்பர்கள் ஸ்வஸ்திக் நாகராஜ் உள்பட சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தி சில ஆவங்ணகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இன்று காலை ரெட்டிக்கு நெருக்கமானவரும், கூட்லகி தொகுதி பாஜ சட்டபேரவை உறுப்பினருமான நாகேந்திரா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்கள், துப்பாக்கி உள்பட பலவற்றை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. வனத்துறை முதன்மை அதிகாரி முத்தையா வீடு தாவணகெரே மாநகரின் சிவகுமாரசாமி நகரில் உள்ளது. அந்த வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஜேந்திரா என்பவருக்கு சொந்தமான டெக்கன் மைனிங் கம்பெனி உள்பட 7 இடங்களில் 25க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook