கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் சுமை..! வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர் தியாகராஜன்
சென்னை: தமிழகத்தில் பொதுக் கடன் 5 லட்சம் கோடியாக உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி என்றும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் சுமை ஏற்றியிருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். மேலும் கடன் சுமை 5 லட்சம் கோடியாக உள்ளது என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தை ஆட்டி படைத்துக் கொண்டிருந்தது. அதை கட்டுப்படுத்தும் பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தினார். அடுத்தடுத்த எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிதி வேண்டும் என்ற சூழ்நிலையில், தமிழகத்தின் கஜானாவை காலி செய்ததோடு, பல லட்சம் கோடி கடனை ஏற்றி மக்களின் மீது கடும் சுமையை ஏற்றி விட்டு சென்றதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக திமுக சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசுக்கு நிதி நெருக்கடி நீடிப்பதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதேபோன்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் அரசின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் இருப்பது குறித்து அவர் கூறியதாவது: இது என் பெயரில் வெளியிடும் வெள்ளை அறிக்கையாகும். இதற்கு பலர் துணையாக இருந்தனர். முதல்வர் காட்டின பாதையில் வந்த அறிக்கை இது. அவரது செயலாளர்கள் பல திருத்தங்களை சொல்லி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு இதில் அதிகளவில் உள்ளது. பல மாநிலங்களிலும் வெளியிட்ட வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தோம். 2001ம் ஆண்டு, அன்றைய தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் செய்த அறிக்கையையும் ஆய்வு செய்தோம். எல்லா தகவல்களும் சேர்ந்து வெளியிடும் கூடுதல் தகவல்களுடன் வெளியிடும் அறிக்கை இது. ஒரு போர்டு அளவுக்கு தகவல் இல்லை.
ஆட்சிக்கு வந்து முதல் 2 மாதம், 2வது அலை கொரோனா தடுப்பதில் போய்விட்டது. அடுத்து, நிறைய தவறு இருப்பதால், அதிக நேரம் இல்லை. பட்ஜெட் முன் வைக்க வேண்டிய கட்டாயம் என்பதுதான் காரணம். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால், நான்தான் பொறுப்பு ஆகும். எதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்றால், 4 காரணம் ஆகும். முதல், எங்களது தத்துவம், குணத்தை தெரிவிப்பதற்ககு ஆகும். எங்களின் அடையாளம். 2வது, தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றியுள்ளோம். வெளிப்படையாக செயல்படும் அரசாங்கம் இது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். அரசாங்கத்தின் அடையாளம். முறைகேடு, சூழ்நிலை, பாரம் என தெரிந்தபிறகு திருத்திக் கொள்ளலாம் என்பதற்காக இதை வெளியிடுகிறோம். நம்முடைய வரவு என்ன? செலவு என்ன? பொது நிறுவனங்களான மின்சார வாரியம், போக்குவரத்து, மெட்ரோ வாட்டர் பற்றி மக்களிடம் தெரிவிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இதனால் முழுவதுமாக என்ன பாடம் எடுத்துக் கொள்ளலாம், எப்படி திருத்திக் கொள்வது, எப்படி கையாள்வது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படை பிரச்னை என்னவென்றால் வருமானம் வரவில்லை. முக்கிய காரணம், வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. பலமுறை சட்டமன்றத்தில் பேசி இருக்கிறோம். 15வது நிதிக்குழு இதுபற்றி பேசி இருக்கிறது. மொத்த வரவு-செலவு திட்டங்கள் 12 முதல் 15 சதவீதம் இருக்கும். கடைசி 5 வருடத்தில் எடுத்த மொத்த பொது கடன் ரூ.3 லட்சம் கோடி ஆகும்.
அந்த ரூ.3 லட்சம் கோடியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அதாது 50 சதவீதம் வெறும் வருவாய் பற்றாக்குறையாகும். இது தின செலவு செய்யப்பட்டுள்ளது. அதைவைத்து திட்டம் பண்ணியிருக்கலாம். ஒரு காலத்தில் ஊதியம், ஓய்வூதியம், மெயின்டனன்ஸ், வட்டி என இந்தளவுக்காவது வருமானம் வந்து கொண்டிருந்தது. இன்று, அந்தளவுக்கு கூட வருமானம் வராமல் கடனை வாங்கி கட்டாய செலவு ஊதியம், ஓய்வூதியம், மெயின்டனன்ஸ், மின்சார கட்டணம் செலுத்துவது, அரசாங்கத்தின் பில் இந்தளவுக்கெல்லாம் எடுக்கக்கூடிய சூழ்நிலையில் இறங்கி விட்டோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கடைசி 5 வருடத்தில் இந்தளவுக்கு சரியவில்லை. பொருளாதாரம் சிலது நமது கையில் இருக்கும், சிலது ஒன்றிய அரசாங்கத்திடம் இருக்கும், சிலது உலக பொருளாதாரத்துக்கு ஏற்ப இருக்கும். கொரோனா வந்தால் எல்லாம் பாதிப்படையும் என்பது உண்மை. ஆனால் கொரோனா என்ற வார்த்தையே தெரிய வருவதற்கு முன்னாலேயே இந்த சரிவு ஆரம்பித்து விட்டது. இந்தளவுக்கு வருமானம் வராததினால், வருவாய் பற்றாக்குறை அதிகம் இருக்கும்போது உறுதியாக நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது உபரியாக நிதி இருந்தது. தற்போது ஒரு குடும்பத்தின் கடன் சுமை ரூ.2.63 லட்சமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டில் கடன் சுமை 4.85 லட்சம் கோடியாகும். இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.