Untitled Document
2011
06
Sep
குழந்தைகள் நோய்களுக்கு தீர்வு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள் ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார் குழந்தை கள் நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவி யல் நிபுணர் டாக்டர் வினோதினி கிருபாகரன்.  குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி  குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள்,  பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால்  உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.  

ரெசிபி

நவதானியக் கஞ்சி: முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவை
யில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.

வெஜ்ரைஸ்: கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.

ஸ்வீட் ஆப்பிள்: ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும். கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.

கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட்,  பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்கவேண்டியதில்லை என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது  கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம்.

கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.

முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.

கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,