கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்
2/28/2021 5:32:23 PM
சென்னை: கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர் மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணியே தொடர அதிமுக விரும்பியது. இந்நிலையில், அதிமுகவுடன், பாமக நேற்று தொகுதி பங்கீடு செய்து கொண்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாஜ, அதிமுகவிடம் 60 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசினார். அப்போது, 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கும், சசிகலா ஆதரவு பெற்ற அமமுகவுக்கும் நாங்கள் சீட் வழங்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த எடப்பாடி, கூட்டணியில் அமமுகவை சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பாஜவிடம் நேற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இருந்துள்ளனர்.
பேச்சுவார்த்தையின் போது, ‘‘எங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’’ என்று கூறி தொகுதிகளுக்கான பட்டியலையும் பாஜ தரப்பில் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு தொகுதி களை ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டாராம். 21 தொகுதிகள் வரை தரலாம் என அவர் கூறியதாக தெரிகிறது. அதற்கு குறைந்தபட்சம் 50 தொகுதிகளாவது ஒதுக்குங்கள் என்று பாஜ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமமுகவுக்கு நாங்கள் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றும் பாஜ தரப்பில் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘‘உங்களுக்கு மட்டும் கேளுங்கள். அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம். நான் பிரதமர் மோடியிடம் இதை வலியுறுத்தினேன். அவரும் ஒப்புக்கொண்டார்’’ என்று கறாராக கூறியுள்ளார். இதனால், பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜ தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறுதியாக 25 சீட்டுக்களை பெற சம்மதித்த பாஜக தலைவர்கள், அமித்ஷா, சசிகலாவுக்கு 20 தொகுதிகள் கொடுத்து எப்படியும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் அவர்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறி சென்றுவிட்டனர். அதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பாஜக குழுவினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் ெசல்வத்தையும் அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை சென்னையில் தான் இருந்தார். காரைக்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கு கொள்கிறார். அவரை, இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்திய கிஷன் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, சசிகலாவை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி, ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பது, 21 தொகுதிகள்தான் தர முடியும் என்று கூறியது குறித்து அமித்ஷாவுடன் பாஜ தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அனைத்தையும் கேட்டு கொண்ட அமித்ஷா, ‘‘அதிமுக ஆட்சியில் அவ்வளவு ஊழல் நடந்து இருக்கிறது. எவ்வளவு ஐடி, அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. இதில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சிக்கி உள்ளனர். இவர்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இருந்தும், இவர்களை நாம்தான் காப்பாற்றி உள்ளோம். ஆனாலும், சசிகலா விஷயத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது சரியில்லை. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால், சசிகலாவை கூட்டணி சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இல்லையென்றால் ஓட்டுகள் சிதறும். சசிகலாவை நம்ம கூட்டணியில் சேர்ப்பதுதான் நல்லது’’ என கூறி உள்ளார்.
இதுகுறித்து பாஜ தலைவர்களிடம் சில ஆலோசனைகளை கூறி அனுப்பி உள்ளார். இந்நிலையில், சசிகலாவை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்று உறுதியாக உள்ள எடப்பாடி, ‘‘சசிகலாவை நீங்களும் சேர்க்க வேண்டாம். நாங்களும் சேர்க்க விரும்பவில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் 30 தொகுதிகள் கூட தருகிறோம். நீங்கள் வேண்டுமென்றால் அவர்களுக்கு தொகுதிகள் பிரித்து கொடுங்கள். ஆனால், அவர்கள் பாஜ சார்பில் உங்கள் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். குக்கர் சின்னத்தில் போட்டியிட கூடாது’’ என்று தனது இறுதியான முடிவை பாஜ தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பாஜ தலைவர்கள், அமித்ஷா காதுக்கு கொண்டு சென்றுள்ளனர். சசிகலாவை சேர்க்க வேண்டாம் என எடப்பாடி அடம் பிடிப்பதால் அமித்ஷா கடும் அதிருப்தியில் உள்ளார்.
அமித்ஷா காரைக்கால், விழுப்புரம் பிரசாரத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார். எடப்பாடி வைத்துள்ள நிபந்தனைக்கு அமித்ஷா இறங்கி வருவாரா என்பது சந்தேகம்தான். ஒருவேளை எடப்பாடி சொன்ன டீலுக்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்தால் இன்று இரவு அதிமுக-பாஜ கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இல்லையென்றால், மீண்டும் அதிமுகவுடன் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சசிகலாவுக்கு 20 தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.