10, 12ம் வகுப்புக்கு ஜன.19ல் பள்ளிகள் திறப்பு: ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
1/12/2021 5:51:42 PM
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிற 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9 மாதங்கள் கடந்த நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுகாதாரத் துறையின் சார்பில் பள்ளிகள் திறப்பது குறித்து உறுதியான எந்த முடிவுகளையும் அறிவிக்காமல் இருந்து வந்தது. பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கருதியது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாம் என்று அரசு முடிவு செய்தது. அது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 12500 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழல்களை கருத்தில் கொண்டு கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க சில பள்ளிகளில் அச்சிட்ட படிவங்கள் வழங்கப்பட்டன. சில பள்ளிகளில் பெற்றோரிடம் கோரிக்கை கடிதங்களாக பெறப்பட்டன. சில பள்ளிகளில் பள்ளிகள் திறக்கலாம், வேண்டாம் என்பதை மட்டும் எழுதிக் கொடுக்கும் படி கேட்டு வாங்கினர். இந்த கருத்து கேட்பில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளை 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பெற்றோர்கள் வழங்கிய கருத்துகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர். அதன்மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த அறிக்கை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகளை பரிசீலனை செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று இன்று காலை அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8ம் தேதி வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளனர். 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.