கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது
10/17/2020 6:29:00 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எளாவூர் ஏழுகிணறு பகுயில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கவரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் காவலர்கள் சுரேஷ், சக்திவேல், ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் காரின் பின்பகுதியில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து காரில் வந்த 3 பேரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த சக்திவேல் (26), ஜெயச்சந்திரன் (44), மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 20 பண்டல்களில் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.