ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
9/24/2020 5:09:23 PM
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களை கவனித்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்க பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையை காரணம் காட்டி அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும், சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளை கடைபிடிக்க வேண்டுமெனவும், கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நகல் பெற்ற நாளிலிருந்து 30 நாட்கள் அவர் பரோலில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.