ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்
11/29/2019 2:18:31 PM
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மதச்சார்பின்மை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முதல்வராக நேற்று மாலை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுடன் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
இக்கூட்டத்துக்கு பின்னர், உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது: புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக, சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் தலைநகராக இருந்த ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்களை 2 நாட்களில் தரும்படி அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.
அவர்கள் அளிக்கும் தகவலின்படி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிவசேனா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என்பதை மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா? என்று கேட்கின்றனர். மதச்சார்பின்மை குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள், அதன் அர்த்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, மதச்சார்பின்மைககு நம் அரசியலமைப்பில் என்ன விளக்கம் வரையறை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுதான் மதச்சார்பின்மை பற்றிய சிவசேனாவின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். இந்துத்துவக் கொள்கைகளை பின்னணியாக கொண்டு, கால் நூற்றாண்டுக்கு மேலாக பாஜவுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கட்சி, தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற மதச்சார்பற்ற கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கைக்கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.