வேலூரில் போலீசார் அதிரடி ரெய்டு மூட்டை மூட்டையாக பதுக்கிய 4 டன் குட்கா சிக்கியது
6/20/2019 3:25:56 PM
வேலூரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் அடுக்குமாடி குடியிருப்பில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 4 டன் குட்கா மற்றும் கெமிக்கல் சிக்கியது. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் உள்பட 2பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வேலூருக்கு ரகசியமாக வந்தனர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி வேலூர் சைதாப்பேட்டை பிடிசி சாலையில் உள்ள முகமதுபேக் பங்களா தெருவில் உள்ள முகமதுஇப்ராஹிம்(37) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீடு முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார், மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சுமார் 70 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய சோதனையில் போதை பொருள் பாக்கெட்டுகள் மற்றும் இதை தயாரிப்பதற்கான கெமிக்கல், பவுடர் போன்றவை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக சோதனையிட்டனர். இதில் பல ஆண்டுகளாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மினி கம்பெனி போல் இயங்கியதும், போதை பொருள் பாக்கெட்டுகள் தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது குறித்து வீட்டின் உரிமையாளர் சைதாப்பேட்டை பிடிசி சாலையில் உள்ள இப்ராஹிம்(37), அதேபகுதியைச் சேர்ந்த அப்சல்பாஷா(28) ஆகிய 2பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பதுக்கி வைத்த சுமார் 70 மூட்டைகளில் இருந்த 4 டன் புகையிலை பொருட்கள் 28 லிட்டர் கெமிக்கல், பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேன் மூலம் கொண்டு சென்றனர். மேலும் இந்த புகையிலை பொருட்களை யாரிடமிருந்து வாங்கினார்கள். தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? முக்கிய புள்ளிகள் யார், யார் யாருக்கு ெதாடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.